உன் அழகான சம்பாஷனைகளை பதிவெடுக்க
புகைப்படக்கருவி வாங்கினோம்
உன் சம்பாஷனைகள் எல்லாமே அழகாக இருக்கிறது .
உன் பெயருக்கான பொருள் மட்டும் அல்ல
நீயே இறைவனின் பரிசு
.
விதையும்,விளைநிலமும் நாங்கள்
அறுவடைநீ... அதன் பலன் இந்த வாழ்க்கை .
எங்களையும் வீசியடிப்பாய் உனக்கு
பிடித்த பொம்மைகள் போல அவ்வபோது
ஊட்டுவதாய் நீ ஏமாற்றும்
கைப்பிடிசோறு நூறாண்டு பசி போக்கும்
பல வார்த்தைகளுக்கு
உன் பிதற்றல்களில் பொருள்கற்றோம்
எண்ணமும், எழுத்தை ஏந்தும் காகிதமும் நாங்கள்
கவிதைநீ ..
இயலும், இசையும் நாங்கள்
நாடகத்தமிழ் நீ..
சூரியன் நீ..
உன்னை சுற்றியபடியே எங்கள் உலகம்